சிறார் வதை : தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை

ஜலகண்டபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனைகள் விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று ஆயுள் தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Update: 2024-06-28 07:53 GMT

நீதிமன்றம் 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லை. பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அவரை பரிசோதித்த போது சிறுமி கர்ப்பம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை கர்ப்பமாக்கிய முருகேசனுக்கு 3 பிரிவுகளின் கீழ் 3 ஆயுள் தண்டனை, தலா ரூ.1,000-ம் அபராதம் மற்றும் ஒரு பிரிவில் 5 ஆண்டு தண்டனை ரூ.1,000-ம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த தண்டனைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயந்தி தீர்ப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News