வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி உதயா வெட்டி கொலை

வில்லிவாக்கத்தில் நேற்றிரவு மதுபோதையில் இருந்த பிரபல ரவுடி உதயாவை 2 பைக்குகளில் வந்த மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்தது, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-05-28 02:09 GMT

ரவுடி உதயா

சென்னை வில்லிவாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 35 வயதான உதயா (எ) உதயகுமார் பிரபல ரவுடி. இவர் மீது வில்லிவாக்கம், ஐசிஎப் காவல் நிலையங்களில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றிரவு வில்லிவாக்கம், கம்மவார் நாயுடு தெரு அருகே தனது நண்பர்களுடன் ரவுடி உதயகுமார் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் மர்ம கும்பல் வந்தது. இதை பார்த்ததும் உதயகுமாரின் நண்பர்கள் தப்பி ஓடினர்.

அந்த கும்பல் உதயகுமாரை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரி வெட்டியது. இதில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். தகவலறிந்து வில்லிவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க முயற்சித்து பயனின்றி உயிரிழந்தார்.

முன் பகை காரணமாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழிக்கு பழியாக மர்ம கும்பல், உதயகுமாரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இன்று காலை 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், மர்ம கும்பலை பிடிப்பதற்கு 3 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News