குற்றப்பத்திரிக்கையில் இடம் பிடித்த பிரியங்கா காந்தி - அமலாக்கத் துறை நடவடிக்கை

Update: 2023-12-29 06:10 GMT

பிரியங்கா காந்தி 

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பிரியங்கா காந்தி. அரியானா மாநிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி விற்பனை செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து இருக்கும் குற்றப் பத்திரிகையில் முதன்முறையாக இவரது பெயரும் இடம்பெற்று உள்ளது. அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவின் பெயரும் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்படும் நபர்களின் பட்டியலில் அவர் இல்லை.

கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் சி.சி.தம்பி. தொழிலதிபரான அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார். கடந்த 2005-2008-ம் ஆண்டில் ஹரியாணாவின் பரிதாபாத் அருகேயுள்ள அமீர்பூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை சி.சி.தம்பி வாங்கினார். டெல்லியை சேர்ந்த எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் அந்த இடத்தை அவர் வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ஹரியாணாவின் அமீர்பூர் கிராமத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் அதே பகுதியில் அதே நிறுவனத்திடம் இருந்து பிரியங்கா காந்தியும் 5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார்.

எச்.எல். பாவா நிறுவனத்தின் மூலம் சி.சி. தம்பி நிலம் வாங்கியபோது சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதை அமலாக்கத் துறை கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தொழிலதிபர் சி.சி.தம்பி கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராபர்ட் வதேராவும் பிரியங்கா காந்தியும் ஹரியாணாவின் அமீர்பூரில் தாங்கள் வாங்கிய நிலங்களை கடந்த 2010-ம் ஆண்டில் எச்.எல். பாவா நிறுவனத்திடம் விற்பனை செய்தனர். இந்த நிலங்களை வாங்கியதிலும் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பான வழக்கில் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டது.

அமலாக்கத்துறை மத்திய அரசின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பிரியங்கா காந்தி மீதான குற்றப் பத்திரிகை தேசிய அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது.

Tags:    

Similar News