தர்மபுரியில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு துவக்கம்
தடங்கம் பகுதியில் 3-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 600 காளைகள் 525 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.;
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு 3 ம் ஆண்டு அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தொடங்கி வைத்தனர். தர்மபுரி மாவட்ட அதியமான் ஜல்லிக்கட்டு மாவட்ட தலைவர் தாபா சிவா நிர்வாகிகள் வீரமணி .கோபி. கடகத்தூர் பாலு இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்த மாடுபிட வீரர்களுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தருமபுரி சேலம், புதுக்கோட்டை, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க, மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், அண்டா, ட்ரெஸ்ஸிங் டேபிள் , தங்க நாணயம் , ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் விழா குழுவினர்கள் சார்பில் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிகட்டில் சுமார் 600 காளைகளும், 525 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பு பணியில் மருத்துவத்துறையினர், தீயணைப்பு துறையினர், 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.