ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முருக பக்தர்கள்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வழிபாடு;
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சிறந்த பரிகார ஸ்தலமாகாவும், சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருகன் மற்றும் பழனி புலிப்பாணி ஆசிரமம் கௌதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்தனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த ஜூன் 14ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனி ராமேஸ்வரம் திருச்செந்தூர் உட்பட 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று கோவிலுக்கு வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முருக பக்தர்கள் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிடலுக்குள் சென்று மூலவர் , சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் கோவிலுக்கு வெளியே வந்த ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் ஒன்று கூடி தமிழில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... ஞானவேல் முருகனுக்கு அரோகரா... கந்தவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க முருகனை வழிபட்டு சென்றனர்.