மோட்டார் பைக்குகளுக்கு தீ வைத்த வாலிபர் கைது!
சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக நண்பரின் இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக நண்பரின் இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்தவர் பூலோக பாண்டி மகன் சிவா (27), வாகன ஓட்டுநரான இவரும், அதை ஊரைச் சேர்ந்த முருகன் மகன் கணேசன் (27) நண்பர்கள். சிவா, கணேசனுக்கு அவர் கேட்டதன்பேரில் செலவுக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் பிரச்னை காரணமாக கணேசனுக்கு செலவுக்கு சிவா பணம் கொடுப்பதை நிறுத்தினார். ஆனால், கணேசன் அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவா தனது வீட்டு முன் நிறுத்தியிருந்த தனது மற்றும் தனது தந்தையின் இருசக்கர வாகனங்களை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன் கற்பூர சூடத்தில் இருசக்கர வாகனங்களை எரித்துவிட்டு தலைமறைவானார். நேற்று காலை வீட்டின் வெளியே சிவா வந்து பார்த்தபோது. இருசக்கர வாகனங்கள் எரிந்திருந்தன. இதுகுறித்து சிவா அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில், கண்காணிப்பு கேமரா பதிவை அணைத்து வைத்து விட்டு கணேசன் இருசக்கர வாகனங்களை கொளுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர்.