கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார்.

நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தீபாவளி 2025, 30% சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,;

Update: 2025-09-19 14:01 GMT
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் தொடர்ந்து வேலை வாய்பினை வழங்குவதற்காக விழா காலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்தாண்டு தீபாவளி 2025-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரககாட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கோ-ஆப்டெக்ஸ்-ல் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள், அச்சிடப்பட்ட சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மற்றும் பிரிண்டட் படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி 15.09.2025 முதல் 30.11.2025 வரை வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும். தீபாவளி 2025 பண்டிகைக்கு நாமக்கல் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.90.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை எய்திட பள்ளி, கல்லூரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்கள் மூலம் கண்காட்சி நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும் ரூ.300/- முதல் ரூ.3000/- வரை சேமித்து இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். மேலும், 11 மாத சந்தா தொகையை அங்கத்தினர் செலுத்தினால் 12-வது மாத சந்தா தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி கூடுதல் பலன் தருவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இத்திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30% வரையிலான சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. தற்போது நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே (தொலைபேசி எண். 04286-291846, 90950 – 75749) இயங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு புடவை நெய்வதற்கு நமது நெசவாளர்கள் 30 ஆயிரம் முறை தங்களது கை கால்களை இயக்க வேண்டிய உள்ளது. இவ்வாறு நெசவாளர்களின் கடின உழைப்பால் உயர் ரக நூல்களில் உற்பத்தி செய்யப்படும் கோ-ஆப்டெக்ஸ் புடவைகள், வேட்டிகள், துண்டுகள், சட்டைகள் உள்ளிட்ட ஜவுளி பொருட்களை பொது மக்களாகிய அனைவரும் வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட முன்வர வேண்டும். அதேபோன்று இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை 100% எய்திடவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் அனைத்து பொதுமக்களும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (உற்பத்தி (ம) வடிவமைப்பு) மா.பாலசுப்ரமணியன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் பெ.செல்வாம்பாள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News