நாமக்கல் அறிவுத்திருக்கோயிலில் முதுகலை யோகா பட்டப்படிப்புக்கான சேர்க்கை தொடங்கியது!

ஆங்கில மருத்துவம் அல்லாத பிற மருத்துவத்தில் மக்களின் ஈடுபாடு 2030க்குள் 25.1 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.;

Update: 2025-09-26 15:18 GMT
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் நாமக்கல் அறிவுத் திருக்கோயிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.தனிப்பட்ட அமைதி வாயிலாக உலக அமைதியை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு, கடந்த 1958ம் ஆண்டு, உலக சமுதாய சேவா சங்கத்தை வேதாத்திரி மகரிஷி நிறுவினார். இந்த இலக்கை அடைய, எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகாவை உருவாக்கி, 'மனவளக்கலை யோகா' என்ற பெயரில் மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கான நடைமுறைகளுடன் கூடிய கல்வியாக வழங்கினார்.உடல், மன, உணர்ச்சி, சமூக-பொருளாதார மற்றும் ஆன்மீக நல்வாழ்வு இணைந்த ஆரோக்கியத்தை அனைவரும் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட கல்வி மையமாக நாமக்கல் அறிவுத்திருக்கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவ, மாணவி கள் சேர்க்கை துவங்கியது. நிகழ்ச்சிக்கு உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் உழவன் தங்கவேல் தலைமை வகித்தார்.உலக சமுதாய சங்கம் -நாமக்கல் அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும் கல்வியாளருமான அருள்நிதி மு.ஆ.உதயகுமார் முன்னிலை வகித்து மாணவ, மாணவிகள் சேர்க்கையை தொடங்கி வைத்து, முதல் மாணவராக அவர் விண்ணப்பித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..நாமக்கல் அறிவுத்திருக்கோயிலில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தின் கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு யோகமும் -மனித மாண்பும் என்ற முதுகலை பட்டப்படிப்பு 2 ஆண்டு கள் பயிற்றுவிக்கப்படும். வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும். இளங்கலை பட்டப்படிப்பு நிறைவு செய்த அனைவரும் இந்த முதுகலை பட்டப்படிப்பில் சேரலாம். நாமக்கல் அறிவுத்திருக்கோயில் மாவட்ட அளவிலான கல்வி மையமாக செயல்படும். இந்த பட்டப்படிப்பில் அடிப்படை யோகா பயிற்சிகள் முதல் அனைத்து வகையான யோகா பயிற்சிகளும் கற்றுத்தரப்படும்.ஆண்டுக்கு கல்வி கட்டணமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்வுகள் எழுதலாம். இதுவரை 15 மாணவ, மாணவிகள் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.மொத்தம் 50 இடங்கள் நிரப்படும்.இந்தக் கல்விக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
முதுநிலை யோகா பட்டப்படிப்பு முடித்து முறையான சான்றிதழ் பெற்ற பிறகு இயற்கை மருத்துவர், யோகா சிகிச்சையாளர், ஆராய்ச்சி உதவியாளர், பேராசிரியர், மருத்துவ உதவியாளர், இயற்கை மருத்துவ ஆலோசகர் போன்ற பணி வாய்ப்புகளை பெறலாம். சுகாதாரப் பாதுகாப்பு துறைக்கான ஆராய்ச்சி மையங்கள், தேசிய நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் அரசுப் பணியைப் பெறலாம். சுய வேலை வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்று அவர் கூறினார்.
2028ஆம் ஆண்டிற்குள் இயற்கை மருத்துவர்களுக்கான தேவை 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவம் அல்லாத பிற மருத்துவத்தில் மக்களின் ஈடுபாடு 2030க்குள் 25.1 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் விவரம் அறிய அறிவுத்திருக்கோயில், நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, நரசிம்மர் சன்னதி தெரு, கோட்டை என்ற முகவரியில் நேரிலும், 99658-09399 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.செய்தியாளர்கள் சந்திப்பில் நாமக்கல் அறிவுத்திருக்கோயில் செயலாளர் சுப்ரமணி, பொருளாளர் நாகராஜன், கல்வி மைய ஞானப் பேராசிரியை கண்மணி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News