புகையான் தாக்குதலை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து
இயற்கை பேரிடராக அறிவித்து நிவாரணம் - விவசாயிகள் கோரிக்கை;
நாகை மாவட்டத்தில், இந்தாண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாய்மூர், கீரம்பேர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு குறுவை சாகுபடி செய்யப்பட்டு, இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், புகையான் நோய் தாக்குதலால் அறுவடைக்கு தயாரான சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலத்தில், புகையான் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் பதராக மாறி உள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். புகையான் நோயை கட்டுப்படுத்த மருந்துகள் தெளித்தும் கூட புகையான் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆகவே, பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தாய்மூர் பகுதியில் புகையான் நோயால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில் நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் விவசாயிகளுக்கு புகையான் நோய் தாக்குதல் வேதனை அளித்துள்ளது. வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே, வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து இயற்கை பேரிடராக அறிவித்து உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.