காவலரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய
காரைக்காலை சேர்ந்த கார் டிரைவர் கைது;
நாகை வடக்கு பொய்கைநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் க.தமிழ்ச்செல்வன். இவரது மகன் பாலசுப்ரமணியன் (39). நாகப்பட்டினம் இமிகிரேஷன் (Sea Fort) பிரிவில் அயல் பணியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு பார்கவன், சக்திஸ்ரீ ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு நாகப்பட்டினம் -திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில், தெற்கு பொய்கைநல்லூரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த, வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர். பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரில் சென்றவரை தேடி வந்தனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 'பின்னர், வீரன் குடிக்காடு இடுகாட்டில், பாலசுப்பிரமணியத்தின் உடல் வைக்கப்பட்டது. 'காவல்துறை சார்பில் டிஎஸ்பி ராமசந்திரமூர்த்தி தலைமையில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில், பாலசுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் டிரைவர் காரைக்காலை சேர்ந்த குமாரவேல் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்..