எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம்.
தென் மாநிலங்களில் 5 ஆயிரம் லாரிகள் இயங்காது எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா அறிவிப்பு.;
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் அதன் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கோரி சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.தொடர்ந்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசுகையில்.தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரம், கேரளா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கி தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் சுமார் 5,500 டேங்கர் லாரிகள் உள்ளன. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு துறைமுகத்திலிருந்து எரிவாயு எடுத்துச் செல்லும் பணியை இந்த லாரிகள் மேற்கொண்டு வருகின்றன. 2025-30 ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. மார்ச் மாதம் புதிய விதிமுறைகளை தளர்த்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால் அப்போது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கருக்கு மட்டுமே ஆயில் நிறுவனங்கள் அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட டேங்கர் லாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். ஆயில் நிறுவன அதிகாரிகள் நாமக்கல் வந்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். துறைமுகங்களில் இருந்து எரிவாயு சேமிப்பு கிடங்குக்கு வரும் எரிவாயுவை லாரிகளில் ஏற்றி பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும் மேலும் அடுத்த கட்டமாக எரிவாயு இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்தப் போராட்டத்தால் 5 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். உரிய முடிவு கிடைக்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை பின்வாங்க போவதில்லை. 6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் ஆயில் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும் என்றார்.