லாலாபேட்டையில் வன்னியர் சங்கம் கட்டிய பேருந்து நிழற்கூடம் அகற்றம்... போராட்டத்தில் ஈடுபட்ட பாமக வினர் கைது..
இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மேற்கண்ட நிழற்கூடத்தில் அமர்ந்து காத்திருந்து பேருந்து ஏறிச்சென்று சுற்று வட்டாரப் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.;
லாலாபேட்டையில் வன்னியர் சங்கம் கட்டிய பேருந்து நிழற்கூடம் அகற்றம்... போராட்டத்தில் ஈடுபட்ட பாமக வினர் கைது.. ராணிப்பேட்டை, மாவட்டம் லாலாபேட்டையில் வன்னியர் சங்கம் சார்பில்,கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக வினர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா வட்டம்,லாலாப்பேட்டை ஊராட்சியில்,ராணிப்பேட்டை பொன்னை பிரதான சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலைய சுற்றுச்சுவர் ஒட்டி பேருந்து நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் சார்பில், இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் உயிர்நீத்த வன்னியர்களின் நினைவாக பேருந்து நிழற்கூடம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மேற்கண்ட நிழற்கூடத்தில் அமர்ந்து காத்திருந்து பேருந்து ஏறிச்சென்று சுற்று வட்டாரப் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட நிழற்குடை அமைந்துள்ள சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை சார்பிலும், குடிநீர் குழாய் பைப் லைன் அமைக்கும் பணிகள் வருவாய்த்துறை சார்பிலும் நடைபெற்று வருகிறது. அதற்காக இடையூறாக பேருந்து நிழற்கூடம் இருப்பதாக கூறி முன்னறிவிப்பு ஏதும் இன்றி பேருந்து நிழற்கூடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளனர். இந்த தகவல் அறிந்த வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராணிப்பேட்டை - பொன்னை பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் வேலூர் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ப.ஜெகன், வாலாஜா வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜோதி,லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ப.மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எல்.வி.மணி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை குண்டு கட்டாக தூக்கி காவல் துறை வேனில் ஏற்றி கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத பொது இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய நிழற்கூடம் அமைத்து தரப்படும் என உறுதியளித்ததன் பேரில் சம்மதம் தெரிவித்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.