ஆவுடையார்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது;
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி கோயிலில் மார்கழி மாத திருவாதிரை தேரோட்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சிவனடியார்களும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்கோவிலில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.மாணிக்கவாசகரால் பாடப்பட்டு புகழ் பெற்ற இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் மற்றும் மார்கழி திருவாதிரை தேரோட்டம் என ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்கான தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு இக்கோயிலின் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்பு நாள்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகளும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடைபெற்று வந்த நிலையில் இன்று விழாவில் முக்கிய நிகழ்வான திருவாதிரை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் வீட்றிருக்க,சிவனடியார்களும் சிவாச்சாரியார்களும் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட திருமந்திரங்களை பாட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலை சுற்றிய நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்து பவனி தேர் வர சிவசிவா கரகோசங்களோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.. இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்..