மெய்யூரில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணியினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.;
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணியினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக மகளிர்களின் முன்னேற்றத்திற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் நவீன பண்ணோக்கு அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மெய்யூர் ஊராட்சி ஏழு துணை கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சி ஆகும். நவீன பன்னோக்கு அரங்கம் கட்டுவதன் மூலம் மெய்யூர் ஊராட்சிக்குட்பட்ட 7 குக்கிராமங்களில் வசிக்கும் 3885 மக்கள் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஊராட்சிகளான நாச்சானந்தல் கிராமத்தில் 2850 மக்களும், மேல்கச்சிராப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 3 குக்கிராமங்களில் வசிக்கும் 1554 மக்களும், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 3 குக்கிராமங்களில் வசிக்கும் 1432 மக்களும், மேல்செட்டிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 2 குக்கிராமங்களில் வசிக்கும் 1692 மக்களும், விஸ்வந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட 4 குக்கிராமங்களில் வசிக்கும் 1930 மக்களும் சேர்த்து மொத்தமாக 13,343 மக்களும் பயன்பெறுவர். புதியதாக கட்டப்பட உள்ள நவீன பன்னோக்கு அரங்கத்தில் அனைத்து பொது மக்களும் தங்கள் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளான திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், குழந்தைகள் காது குத்தல் முதலான அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பான முறையில் நடத்திடலாம். மேலும், ஊராட்சியில் மூலம் மேற்கொள்ளப்படும் பொது நிகழ்ச்சிகளையும் நடத்திடலாம். பொதுமக்கள் தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்தும் போது வாடகை அதிகளவில் செலவிட நேரும். ஆனால், நவீன பன்னோக்கு அரங்கத்தில் நிகழ்த்திடும் போது குறைந்த அளவே செலவாகும். இந்த பண்ணோக்கு அரங்கத்தில் உணவுக்கூடம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் நவீன மயமாக கட்டப்படவுள்ளது. கட்டுமான பணிகளை 18 மாத காலத்திற்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர், திட்ட இயக்குநர் ஆர்.மணி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இளங்கோ, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.