குண்ணத்தூரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்தர சிறப்பு மருத்துவ முகாம்.
செய்யாறு மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் ஆரணி அடுத்த குண்ணத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்தர சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம்.;
ஆரணி, செய்யாறு மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் ஆரணி அடுத்த குண்ணத்தூரில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்தர சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. மக்களின் ஆரோக்கிய நலனை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த முகாமில்,பொது மக்களுக்கு ஒரே இடத்தில் உயர்தர மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுரேஷ் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலர் த.நி.சத்தீஷ்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். ஒன்றியசெயலாளர் துரை.மாமது முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்தும், இந்த முகாம்களின் அவசியம் குறித்தும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சுகாதார மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கினார். இதுவரை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 30 இடங்களில் நடத்தப்பட்டு சுமார் 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் பயனாளிகள் – 5 பேருக்கும், “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் பயனாளிகள் – 5 பேருக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் 3 பேருக்கும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இதய மருத்துவம், நரம்பு மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துமவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்தும், நீரிழிவு நோய் மருத்துவம், சித்த மருத்தும் மற்றும் ஊட்டச்சத்து மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனை கள் செய்யப்பட்டது. மேலும் இரத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு, உப்பின் அளவு, எக்கோ, இசிஜி, எக்ஸ்ரே, மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், முதலமைச்சரின் விரிவா மருத்துவ காப்பீட்டு பயனாளிகள் அட்டை வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. இதில் ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றியசெயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மோகன், சுந்தர், நகரபொறுப்பாளர் சைதை வ.மணிமாறன், மாவட்ட பிரதிநிதி முள்ளிப்பட்டு ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 1118 பேர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.