பரமத்தி வேலூர் பூக்கள் ஏல மார்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1000

பரமத்திவேலூர் பூக்கள் ஏல மார்கெட்டில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பூக்கள்  விலை உயர்வடைந்துள்ளது.

Update: 2024-08-16 13:28 GMT
பரமத்திவேலூர், ஆக.16- பரமத்திவேலூர் வட்டாரத்தில் ஆனங்கூர், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகர், கோப்பணம்பாளையம், கபிலர்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி‌ மற்றும்  கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.500- க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.200- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும், முல்லைப் பூ ரூ.600- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், பன்னீர் ரோஜா ரூ.120- க்கும் ஏலம் போனது. வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி கழுவாடியை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.320- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.300- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், பன்னீர் ரோஜா ரூ. 200- க்கும் ஏலம் போனது. வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு அடைந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News