நீரில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலை ரூ.3.00 இலட்சத்தினை வழங்கிய அமைச்சர் மா.மதிவேந்தன்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் வட்டத்தைத் சேர்ந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலை ரூ.3.00 இலட்சத்தினை வழங்கினார்.;
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பொன்பரப்பிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலை ரூ.3.00 இலட்சத்தினை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பொன்பரப்பிபட்டி கிராமம் பெருமாள் கோவில் காடு என்ற பகுதியில் வசிக்கும் திரு.பழனிசாமி (வயது 33) த/பெ.முருகேசன் என்பவர் கடந்த 26.10.2025 அன்று திருச்செங்கோடு வட்டம், கட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, ரூ.3.00 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார்கள்.அதன்படி, இன்றைய தினம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆகியோர் உயிரிழந்த பழனிசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அன்னாரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலை ரூ.3.00 இலட்சத்தினை வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.