குளித்தலை கடம்பவனீஸ்வரர் கோவிலில் 7 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்து மரியாதை
70 வயதை கடந்த தம்பதியருக்கு வேட்டி, சட்டை, புடவை, வளையல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கல்;
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் வசந்த மண்டபத்தில் 70 வயது பூர்த்தியடைந்த 7 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் புத்தாடையுடன் வந்த 7 தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்துக் கொண்டனர். அவர்களுக்கு வேட்டி, சட்டை, புடவை, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், எவர்சில்வர் தட்டு, பழ வகைகளுடன் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் கடம்பவனீஸ்வரரை வழிபட்டு தரிசனம் செய்தனர். இதில் கோயில் செயல் அலுவலர் பொறுப்பு சித்ரா, கோவில் அலுவலர் விஜயகுமார், அர்ச்சகர் ரத்தனகிரி, நகர் மன்ற உறுப்பினர் சரோஜா முத்துசாமி, சிவதொண்டர் மது உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.