.150 கோடி மதிப்பீட்டில் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஆட்சியர் ஆய்வு

பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2026-01-02 11:22 GMT
பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாடாலூர் திருவளர்க்குறிச்சியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 60 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (02.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பாடாலூரில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் கையாளும் வகையில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ரூ.150 மதிப்பீட்டில் நிறுவப்படும் என 13.04.2022 அன்று நடைபெற்ற பால்வளம் தொடர்பான மானிய கோரிக்கையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கடன் உதவியுடன் தொழிற்சாலை நிறுவுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணியானது 18.10.2023 அன்று துவங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை 7 தளங்களுடன் 43 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ரூ.26.53 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது. ரூ.121 கோடி மதிப்பீட்டில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் ஆய்வு செய்தார். குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பணிகள் அனைத்தும் தரமாகவும் திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் பணி தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை ஒவ்வொரு வாரமும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் ஆவின் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார. மேலும் பால் கொள்முதல் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எவ்வளவு லிட்டர் கொள்முதல் செய்யப்பட உள்ளது உபரி பால் மூலமாக தயாரிக்கப்படும் பால் பொருட்கள் குறித்தும் அதன் தயாரிப்பு செயல்முறை குறித்தும் மாவட்ட ஆட்சியர் விரிவாக கேட்டறிநாதார். பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு உபரி பாலில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் பால் பவுடர், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் பவுடர், டெய்ரி ஒயிட்னர் மற்றும் வெண்ணெய் தயாரிக்கும் வசதிகளுடன் தமிழகத்தில் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அமைய உள்ள இந்த ஆலையின் மூலமாக பெரம்பலூர் மாவட்டம் உட்பட 11 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், பெரம்பலூர் பால்வளம் துணைப்பதிவாளர் ஜெயா, கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் பிரேம், பால்வளத்துறை உதவி மேலாளர் மரு.அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News