18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலவிநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.;
ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள ஈப்பு ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். மேலும் 7 ஆண்டுகள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்கள் அனைவரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும் என்பதும் உட்பட மொத்தம் 18 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலவிநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரிக்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் லோகமணிகண்டன், மாவட்ட துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி நன்றி கூறினார்.