சாலையில் சென்ற கார் எதிர்பாராத விதமாக தீ விபத்து!

பொன்னமராவதி அருகே சாலையில் புதன்கிழமை சென்றுக் கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

Update: 2024-07-11 09:42 GMT

 தீ விபத்து

பொன்னமராவதி அருகே சாலையில் புதன்கிழமை சென்றுக் கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி கொல்லங்காடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் சோலையப்பன்.

இவருக்கு சொந்தமான காரில் உறவினர் சதீஷ்குமார், அவரது மனைவி சினேகா, 1 வயது குழந்தை மற்றும் உறவினர்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதிக்கு புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தனர்.

பொன்னமராவதி வலையபட்டி அருகே உலகம்பட்டி சாலையில் வந்தபோது, தீடீரென காரிலிருந்து புகை வரத் தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த அனைவரும் காரை விட்டு இறங்கிய நிலையில் கார் தீப்பற்றி கரும்புகையுடன் எரியத் தொடங்கியது.

தகவலின்பேரில், அங்கு வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலானதீயணைப்புப் படையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீவிபத்தில் கார் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.இதுகுறித்து பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News