இருளர் மக்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் இருளர் மக்களின் உடலை அடக்கம் செய்ய பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் தேர்தல் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-03-29 11:38 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே உள்ள கிராமம் காமாட்சிபுரம். இக்கிராமத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் அதிகமான இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராம மக்கள், மயான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வலியுறுத்தி, நேற்று வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஜெகதேவியில் 100-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காமாட்சிபுரம் மற்றும் காந்திநகர் பகுதிகளில் குடிஅமர்த்தப்பட்டோம்.

எங்களுக்கு ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே கரியன்கொள்ளை என்னுமிடத்தில் மாயனம் உள்ளது. இந்நிலையில், மயானப் பாதை மற்றும் மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கிரானைட் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். சமீபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் பல்வேறு சிரமங்களுக்கு இடையே அடக்கம் செய்தோம். தொடர்ந்து மயானம் ஆக்கிரமிப்பை மீட்டு, சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த பர்கூர் உதவி தேர்தல் நடத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால், தேர்தலுக்கு பின்பு மயான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, வீடுகளில் கட்டப்பட்டு இருந்த கருப்புக் கொடிகளை அகற்றினர்.

Tags:    

Similar News