பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதி செய்து தராததால் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2024-06-10 13:30 GMT

முற்றுகை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு பஞ்சாயத்து பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 2 ஆண்டாக எவ்விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் இப்பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலந்துச் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டும் தண்ணீர் வருவதில்லை, மழை நீரை பிடித்து அதனை சூடாக்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளில் 2 மட்டுமே எரிகிறது. மின் விளக்கு சரி செய்து விட்டதாக கணக்கு மட்டும் காட்டுகின்றனர். பஞ்சாயத்தில் நிதி உள்ளது, அதனை முறைக் கேடாக பயன்படுத்துகின்றனர்.

பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து கூட்டங்களை நடத்துவதே இல்லை, அவரும் பஞ்சாயத்திற்கு வருவதே இல்லை என்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் மிகவும் பலதடைந்துள்ளது அதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும், அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும், பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தி உரிய முறையில் அரசு கொடுக்கும் சலுகைகள் மக்களுக்கு எளிய வழியில் கிடைக்க நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். 

Tags:    

Similar News