தொழிற்சாலை வாகனத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு !
தனியாருக்கு சொந்தமான கல்காரியில் தொழிற்சாலை வாகனத்தில் சிக்கி தொழிலாளி பலி போலீசார் விசாரணை
Update: 2024-07-04 06:32 GMT
திருவண்ணாமலை மாவட்டம், பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 39; இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், மதூர் கிராமத்தில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான கல் அரவை தொழிற்சாலை ஒன்றில் கண்ணன் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, புழுக்கம் காரணமாக கண்ணன் அத்தொழிற்சாலை வளாகத்தின் ஒரு பகுதியில் திறந்தவெளியில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதே தொழிற்சாலையில் ஓட்டுனராக பணியாற்றும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவர் பணி மேற்கொள்ள நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு 'டோசர்' இயந்திரத்தை இயக்கியதாக தெரிகிறது. டோசர் இயந்திரத்தை பின்புறமாக இயக்கிய போது, தொழிற்சாலை வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணன் மீது கவனக் குறைவு காரணமாக ஏற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.