ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் குண்டர் சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் குண்டர் சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2025-08-06 07:25 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டே 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மனுதாரர்கள் தரப்பில் அஜரான தாங்கள் கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மேலும், இயந்திர தனமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஓராண்டாக வழக்கில் எந்த முன்னேற்ற்றமும் இல்லை என கூறி 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதே சமயத்தில், இவர்களின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்ட காரணத்தினால் மட்டுமே இவர்களுக்கு ஜாமீன் வழங்கி விட கூடாது என்றும், வழக்கின் தீவிரத்தை முழுமையாக கருத்தில் கொண்டே ஜாமீன் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Similar News