ஜெயங்கொண்டத்தில் 3 போலி டாக்டர்கள் கைது

ஜெயங்கொண்டத்தில் 3 போலி டாக்டர்கள் கைது

போலி மருத்துவர்கள் நடத்திய கிளினிக்

ஜெயங்கொண்டத்தில் போலி 3 டாக்டர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் மருத்துவர் மாரிமுத்துவுக்கு புகார் அளித்தனர்.

அதே நேரத்தில் ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழன் வெட்டிய புகழ்பெற்ற பொன்னேரியில் மருத்துவ கழிவுகள் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அங்கிருந்து மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் ப்ளீச்சிங் போட்டு தூய்மைப்படுத்தி சென்றனர். அதேசமயம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் டாக்டர் மாரிமுத்து தலைமையிலான,

குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களில் மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்க்கின்றார்களா? மருத்துவமே படிக்காமல் எவரேனும் பொது மக்களுக்கு மருத்துவம் செய்கிறார்களா? என்பது குறித்து சின்னவளையம் பெரியவளையம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னவளையம் கிராமம் தோப்புத் தெருவை சேர்ந்த பத்மநாபன் (58), அதே பகுதி கீழத்தெருவைச் சேர்ந்த பாண்டியன் (61), பெரியவளையம் கிராமம் தெற்கு தெருவைசேர்ந்த தமிழ்ச்செல்வன் (39) ஆகியோர்கள் தங்களது,

வீடுகளில் போலி டாக்டர்களாக செயல்பட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சின்னவளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மற்றும் பாண்டியன் மற்றும் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் இது குறித்து அதிகாரிகள் அவர்களுக்கு மருந்து சப்ளை செய்தது யார்? என்பது குறித்தும் அந்த மருந்து கடை உரிமையாளர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மருத்துவ சீட்டுக்களை கொடுத்து மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டும் என பல்வேறு வகையில்,

அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலில் இதுபோன்று சம்பவத்தில் ஈடுபடுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story