பச்சிளங்குழந்தையை கொன்று மாயமானதாக நாடகம் - தாய், பாட்டி கைது

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 30 நாளேயான பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிட்டு மாயமானதாக நாடகமாடிய குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன் கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48). என்ற மனைவியும் ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18) திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக மஞ்சுளா கூறிய மாற்று சமூகத்தை சேர்ந்த அன்புதுரை மீது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் மார்ச் 29 -ந்தேதி மஞ்சுளாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த செய்தி அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் அண்மையில் அங்க அடையாளங்கள் பதிவு செய்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தாய் மஞ்சுளாவுடன் தூங்கி கொண்டு இருந்த குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டார்கள் என மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க மஞ்சுளா புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மஞ்சுளா வீட்டிற்கு அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கருவேல மரக்கிளைகள் வைக்கப்பட்டிருந்தது இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயார் மஞ்சுளா பாட்டி பரிமளா மஞ்சுளாவின் சகோதரர்கள் உள்ளிட்ட ஐந்து பேரிடம் மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

போலீசார் விசாரணையில் குழந்தையை தானே கொலை செய்ததாக மஞ்சுளா ஒப்பு கொண்டார் மேலும் தகாத உறவால் குழந்தையை பெற்றுக் கொண்ட தன்னை தனது குடும்பத்தினர் அடிக்கடி திட்டியதாகவும், தவறு செய்ததை அடிக்கடி சுட்டிக்காட்டி திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடலாம் என நினைத்ததாகவும் அதனால் தனது குழந்தையை தானே கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மஞ்சுளாவின் தாயார் பரிமளாவையும் போலீசார் கைது செய்தனர் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் குழந்தையை கொலை செய்வதற்கான வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.பெற்ற தாயே குழந்தையை புதைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story