மரத்தடி விழுந்து ஒருவர் சாவு: இழப்பீடு கேட்டு சாலைமறியல் போராட்டம்!

மரத்தடி விழுந்து ஒருவர் சாவு: இழப்பீடு கேட்டு சாலைமறியல் போராட்டம்!
கோவில்பட்டி அருகே மரத்தடி விழுந்து தொழிலாளி உயிரிழந்ததை தொடர்ந்து, இழப்பீடு கேட்டு உறவினர்கள் நேற்று திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (55). இவர் தெற்கு திட்டங்குளம் அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள தனியார் குச்சி கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கம்பெனியில் மாசிலாமணி பணியில் இருந்தார். அப்போது குச்சி தயாரிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தடி ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக உருண்டு அவர் மீது விழுந்தது. இதில், மாசிலாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாசிலாமணிக்கு அழகுமுத்து என்ற மனைவியும், மாரி ராஜ் என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. இந்நிலையில், மாசிலாமணிக்கு சரிவர பேச முடியாது. சரியாக காது கேட்காது. அதனால் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாசிலாமணி உடலை வாங்க மறுத்து தெற்கு திட்டங்குளம் ஊர் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் கிராம மக்கள், உறவினர்கள் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், பிரேமா மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம். அதனால் மறியலை கைவிட வேண்டும் என கூறினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்ட கிராம மக்கள் சாலையோரம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவண பெருமாள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ரூ.6.25 லட்சம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாசிலாமணி உடலை பெற்றுச் சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story