கைதிக்கு உதவிய போலீசார் சிக்குகிறார்

X
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட 130 -க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் வழிப்பறி வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட பாபுராஜ் (30) என்பவரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிறைத்துறை உதவி ஜெயிலர் சிவன் தலைமையில் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது விசாரணை கைதியான பாபுராஜிடம் இருந்து செல்போன் பேட்டரி மற்றும் கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை செய்த போது மற்றொரு கைதி அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு இதே சிறையில் இருந்த கோவையை சேர்ந்த விசாரணை கைதிகளிடமிருந்து இரண்டு செல்போன்கள், பேட்டரி, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகளுக்கு யாரேனும் சிறைத்துறை அதிகாரிகள் உதவி செய்தார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறைக்கு கோவை மத்திய சிறைத்துறை லஞ்ச ஒழிப்புத்துறை முதல் நிலை காவலர் சடையன் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட சிறையில் பணியாற்றும் சிறை காவலர்கள், சமையலர்கள், செவிலியர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக துருவி துருவி சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். கைதி அறையில் செல்போன், செல்போன் பேட்டரி, கஞ்சா எப்படி வந்தது என சிறைத் துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறைத்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் கைதிக்கு உதவி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
Next Story

