டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை உறுதிபடுத்த வேண்டும்..

X
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவித்ததை ஒன்றிய அரசு உறுதிபடுத்த வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல்லை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், அதனை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பாரம்பரிய நெல்லை விற்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாச்சூர் அருகே உள்ள உழவயல் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை உடன் அகற்றி, அப்பகுதியில் தடையற்ற பாசனத்தை ஏற்படுத்தி தர வேண்டும். நெல்லுக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஊக்கத் தொகையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.750 ஐ உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது மானாவாரி பகுதிகளில் நிலக்கடலை விதைக்கும் பணி தீவிரமாக இருப்பதால், தரமான, முளைப்புத்திறன் அதிகம் கொண்ட விதையை வேளாண்மை துறை மூலம் வழங்க வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு நகரப் பகுதிகளில் மூன்று கிலோ கோதுமை மாதந்தோறும் வழங்குவது போல், கிராமப்புங்களில் உள்ளவர்களுக்கும் மாதந்தோறும் கோதுமை வழங்க வேண்டும். கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்கான நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும். 15 ஆயிரம் கரும்பு விவசாயிகள் வேறு ஏதும் கடன் பெற முடியாமல் அவதிப்படுவதால், வங்கி கடன் தொடர்பான சிபில் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை அதற்கான ரசீது காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படவில்லை, அதை உடன் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு பெறும் தனியார் நிறுவனங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கிளை அலுவலகங்களை திறந்து விவசாயிகளின் சந்தேகங்களை அவ்வப்போது தீர்க்க வேண்டும். பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து நிலையத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே, ராஜாமடம் வாய்க்கால் அகலத்தை குறைக்கவோ, நீர் வழித் தடத்தை அழிக்காமல் சாலை அமைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளதால் சம்பா, தாளடி நெற்பயிரில் பூச்சித்தாக்குதல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேளாண்மைத்துறை சார்பில் பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப் பட வேண்டும். பூதலூர் பகுதியில் டிஏபி, பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். ராயமுண்டான்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது பதிலளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெல்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக வழங்கிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் தயங்குகின்றனர். உரிய மகசூல் இழப்பை சரியான முறையில் அளவீடு செய்திட வேண்டும். திருவிடைமருதூர் தாலுகா சேங்கனூர் பனந்தோப்பு வடிகால் வாய்க்காலின் ஒரு பகுதி பட்டா இடத்தில் உள்ளது எனக்கூறி, வடிகாலை அடைக்க முற்படுகின்றனர். எனவே, வருவாய் கணக்கில் வடிகால் என பதிவிட வேண்டுகிறோம். கல்லணைக் கால்வாய் 20 கண் பாலம் அருகில் இஆர்எம் பணியில் சாலை பழுதடைந்து உள்ளதை உடனடியாக சரி செய்திட வேண்டும். கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். இந்த ஆண்டு கோடை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்புக்கு உரிய இழப்பீடு இன்னும் கிடைக்கப் பெறாமல் உள்ளது. அதனையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story

