துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் பட்டா மாறுதல் கேட்டு பள்ளபாளையம் அ கிராம நிர்வாக அலுவலர் சரத்குமாரிடம் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு, கிராம நிர்வாக அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத தனசேகரன் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு தனசேகரன் கொண்டு சென்றார். அதைத்தொடர்ந்து, பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்த போது, திட்டமிட்டபடி அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.மேலும், இதில் தொடர்புடைய மண்டல துணை வட்டாட்சியர் நல்லசாமி அங்கு வந்தார். தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



