நீலகிரி படுக இன மக்களின் சக்கலாத்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது....
நீலகிரி மாவட்டத்தில் 400 மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களில் அச்சமுதாய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் சக்கலாத்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.... இந்த பண்டிகையையொட்டி நேற்று படுகர் இன மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இறந்து போன தங்களது முன்னோர்களை வரவேற்கும் வகையில் அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, உத்தரனை, ஹூம்ரி என்பது உள்ளிட்ட மூலிகைச் செடிகளை ஒன்றாக கட்டி தங்கள் வீடுகளின் கூரை மற்றும் மாட்டுத்தொழுவத்தின் கூரைகளில் காப்பு கட்டினர். இதனைத் தொடர்ந்து இன்று தங்களது வீட்டில் உள்ள அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலைப் பயன்படுத்தி வீட்டின் முன்புற வாசல்களில் நட்சத்திரம், சூரியன், சந்திரன் மற்றும் விவசாய கருவிகளின் படங்களை கோலமாக வரைந்தனர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் பலகாரங்களை படையல் இடுவதற்காக தங்கள் வீடுகளில் சமைத்தனர். பின்னர் அந்தந்த கிராமங்களில் உள்ள தொட்ட மனை என்றழைக்கப்படும் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இளைஞர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று முன்னோர்களுக்காக அவர்கள் தயாரித்த உணவுகளை சேகரித்தார். இதையடுத்து அந்த உணவுகளை, ஊருக்குப் பொதுவான ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தலா ஒரு நபர் என ஏராளமானோர் கலந்துகொண்டு படையலிட்டு தங்களது முன்னோர்களை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தாங்கள் தயாரித்த பலகாரங்களை அண்டை வீட்டாருக்கு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்..
Next Story




