கருப்பூர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்மநபர்கள்
Salem King 24x7 |10 Jan 2025 3:25 AM GMT
போலீசார் விசாரணை
சேலம் அஸ்தம்பட்டி அருகே பள்ளக்காடு 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 48). இவர், தனது சொந்த வேலை விஷயமாக அஸ்தம்பட்டியில் இருந்து ஆட்டோ மூலம் 5 ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஓமலூர் செல்வதற்காக அரசு பஸ்ஸில் சென்றார். கருப்பூர் என்ஜினியரிங் கல்லூரி அருகில் பஸ் சென்ற போது தனது கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலி இல்லாததை கண்டு வசந்தி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே டிரைவர் பஸ் நிறுத்தினார். பின்னர் வசந்தியிடம் போலீசில் புகார் அளிக்கும்படி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். ஓடும் பஸ்சில் வசந்தியிடம் தங்க சங்கிலியை பறித்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் பஸ் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story