ஏரிமலையில் பொங்கல் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

பென்னாகரம் வட்டம், ஏரிமலையில் கலெக்டர் சாந்தி மலைவாழ் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி, 4 பயனாளிகளுக்கு வீடு வழங்கி, பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று பங்கேற்று சிறப்பித்தார். சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த மலைப்பகுதியில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழங்குடியினர் நலத்துறை சார்பில் 13 பழங்குடியினர் நல வீடுகள் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் 4,95,000 ஆகும். முடிவுற்ற நான்கு வீடுகளை பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இ.ஆ.ப., வழங்கினார். மேலும் ஏரிமலை கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.59.5 இலட்சம் மதிப்பீட்டில் 17 வீடுகள் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு, ஏரிமலை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்று மலைவாழ் மக்களுடன் இணைந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடினார்கள். ஏரிமலையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகை அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்கள். பின்னர், ஏரிமலை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவர்களை சந்தித்து கல்வித்திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். ஏரிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கினார். மேலும் ஏரிமலையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, ஏரிமலையில் இருந்து அளக்கட்டுக்கு அமைக்கப்படும் சாலை பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இச்சாலை அமைப்பதற்கான முன்மொழிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முதல் நிலை அனுமதி மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்த்து இருப்பதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இ.ஆ.ப. தெரிவித்தார்.
Next Story