திமுக வேட்பாளர் பேட்டி

X
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், கூட்டணிக் கட்சியினருடன் வந்து தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் எம்பி அந்தியூர் செல்வராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.வேட்புமனு தாக்கலுக்குப்பின் வி.சி.சந்திரகுமார் கூறியதாவது பெரியாரின் வழித்தோன்றல்களான திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களால், மீண்டும் 2026-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அந்த மக்கள் நலத்திட்டங்களை முன்னிருத்தி நாங்கள் போட்டியிடுகிறோம். எனவே, வரலாற்றுச்சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியை இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் 200 சதவீத வெற்றி கிடைக்கும் என பெண்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர். இது வரை 9 வார்டுகளில் மக்களைச் சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நினைத்த, விட்டுப்போன்ற அனைத்து திட்டங்களும், பணிகளும் நிறைவேற்றப்படும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்று தனிப்பட்ட எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொய்யும் புரட்டும் பேசி, அரசியல் கட்சிகளில், ஒரு வியாதியாக நாம்தமிழர் கட்சி உள்ளது. அவர்களுக்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. அவர்களோடு போட்டியிடுவது காலத்தின் கொடுமையாகக் கருதுகிறேன். ஈரோட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என இங்கு பிறந்து வளர்ந்த எனக்கு முழுமையாகத் தெரியும். எனவே, எங்கோ இருந்து வந்து எழுதிக் கொடுத்ததை பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story

