மிளகாய், கத்திரி சாகுபடியில் அதிக மகசூல் பெற

வேளாண் இடுபொருட்கள் விநியோகத்துடன் ஒரு நாள் பயிற்சி முகாம்
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் இணைந்து, நாகை மாவட்டத் தோட்டக்கலைத் துறை உதவியுடன் நாகை மாவட்டம் கீழையூர் வட்டத்தை சார்ந்த 6 கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பட்டியலின விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வேளாண் இடுபொருட்கள் விநியோகத்துடன் ஒரு நாள் பயிற்சி முகாம், நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமை, காரைக்கால் வேளாண் கல்லூரியின் மண்ணியல் துறை பேராசிரியர் ஆர்.சங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், உயர்ரக தொழில்நுட்பங்களை உபயோகித்து மகசூலை அதிகரிக்க வேண்டும். சரியான தருணத்தில் உரமிட்டு, உயிர் உரங்களை உபயோகித்து, உரச்செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, நாகை மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் பரிமேலழகன், முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளிடம், மிளகாய் மற்றும் கத்திரி சாகுபடி குறித்தும், அதன் திட்டங்கள் குறித்தும், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். உதவி தோட்டக்கலைத்துறை இயக்குனர் முகமது சாதிக், முகாமில் வழங்கப்படும் இடுபொருட்களை வீணாக்காமல் முறையாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், அவ்வாறு அதிக மகசூல் ஈட்டும் 3 விவசாயிகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறினார். பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் குமார், நோயியல் துறை உதவி பேராசிரியர் சண்முக பிரியா ஆகியோர், மிளகாய் மற்றும் கத்திரியில் தோன்றும் நோய்கள் மற்றும் பூஞ்சைகள், அதன் மேலாண்மைக் குறித்தும் எடுத்துரைத்தனர். இறுதியாக, கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும், மிளகாய், கத்திரி நாற்றுகள், திட மற்றும் திரவ ஹுமிக் ஆசிட், பஞ்சகாவ்யா, சூடோமோனாஸ் திரவம், மீன் அமினோ அமிலம், மண்புழு உரம், நானோயூரியா, கடற்பாசி உரம், வேப்பம்புண்ணாக்கு மற்றும் பண்ணைக் கருவிகளான ஒற்றை சக்கைத் தள்ளுவண்டி, மண்வெட்டி, களைவெட்டி, அலுமினியக் கூடை ஆகியவை விலையில்லாமல். வழங்கப்பட்டன.
Next Story