வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை

X

வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க முந்திரி விவசாயிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
அரியலூர், பிப்.5- அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச்}யிடம், சோழன் முந்திரி விவசாயிகள் நலச் சங்கத்தினர் புதன்கிழமை மனு அளித்தனர். அச்சங்கத்தின் தலைவர் க.குமார் வாண்டையார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு: செந்துறை வட்டம், சன்னாசிநல்லூர் , குடிகாடு, சிலுப்பனூர், சேந்தமங்கலம்,ஆதனகுறிச்சி, தெத்தெரி, முள்ளுக்குறிச்சி, கோட்டைக்காடு ஆகிய கிராமங்களை கடந்து செல்லும் வெள்ளாறு, ஒரு காலத்தில் 60 அடி ஆழத்துக்கு மணலாக காட்சி தந்தது. ஆனால் இன்றைய நிலை, அந்த ஆற்றில் மணல் திருடப்பட்டு கருவை காடுகளாகவும், புதர் மண்டியும், செடிகொடிகளாகவும் உள்ளது. அந்த ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட முள்ளுக்குறிச்சி சுரேஷூன் அதிமுக ஒன்றியச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டது. ஆயினும் அவர் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால், இதுகுறித்து புகார் அளித்த தமிழப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல துணைச் செயலர் முடிமன்னனையும், துணைச் செயலர் ராஜேந்திரனையும் அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சுரேஷ் மீது ஏற்கனவே தளவாய் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காவல் துறையும், வருவாய் துறையும் அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மணல் திருட்டை தடுக்க வேண்டும். இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இல்லையென்றால் அனைத்து கட்சியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைந்து மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட சூழல் உருவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story