பனகல் பூங்கா - கோடம்பாக்கம் தடத்தில் ‘பெலிகன்’ இயந்திரத்தின் சுரங்க பணி ஜூனில் முடியும்: அதிகாரிகள் தகவல்

X

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான தி.நகர் பனகல் பூங்கா - கோடம்பாக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், ஒரு வழித்தடம் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1) ஆகும். இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, தியாகராய நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை (2.063 கி.மீ.) சுரங்கப்பாதை அமைய உள்ளது. இதற்காக ‘பெலிகன்’ என்னும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி, பூமியில் இருந்து 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜன.31-ம் தேதி தொடங்கியது. இப்பாதையில் களிமண்ணை வெளியேற்றுவது, அடுக்குமாடி குடியிருப்புகள் அருகே சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பாதுகாப்பாக இயக்குவது உள்பட பல்வேறு சவால்கள் இருந்ததால், சுரங்கப்பாதை பணி மெதுவாக நகர்ந்தது. இந்நிலையில், ‘பெலிகன்’ இயந்திரம் 1.3 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்து, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது, பனகல்பூங்கா முதல் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 2.063 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணி மேற்கொள்ள வேண்டும். இதில், பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை சுரங்கப்பாதை நீளம் 1.155 கி.மீ. ஆகும். பனகல் பூங்காவிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு ‘பெலிகன்’ இயந்திரம் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்து, 1.3 கி.மீ. சுரங்கப்பாதை பணியை நிறைவுசெய்துள்ளது. இதற்குப் பின்னால், ‘பீகாக்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் 105 மீட்டர் தொலைவில் வந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து, பெலிகான் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூன் மாதத்தில் மீனாட்சி கல்லூரி அருகே பணியை நிறைவு செய்யும். அதேபோல், இரண்டாவது இயந்திரமான ‘பீகாக்’ ஜூலை மாதத்துக்குள் வேலையை முடிக்கும். சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் கூறினர்.
Next Story