குன்றத்துார் திருஊரக பெருமாள் கோவிலை தினமும் தாமதமாக திறப்பதால் வாக்குவாதம்

குன்றத்துார் திருஊரக பெருமாள் கோவிலை தினமும் தாமதமாக திறப்பதால் வாக்குவாதம்
X
குன்றத்துாரில், பழமைவாய்ந்த திருவிருந்தவல்லி தாயார் சமேத திருஊரக பெருமாள் கோவில் தினமும்தாமதமாக திறப்பதால் பக்தர்கள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், பழமைவாய்ந்த திருவிருந்தவல்லி தாயார் சமேத திருஊரக பெருமாள் கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் மூலஸ்தானத்தில், பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டினால் தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த 3ம் தேதி விமரிசையாக நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், தினமும் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த கோவிலில் வழிபாடு செய்ய, பக்தர்கள் நேற்று காலை 6:00 மணிக்கே திரண்டனர். ஆனால், காலை 9:00 மணி வரை கோவில் திறக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்து, பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்; பலர் அங்கிருந்து புறப்பட்டனர். பின், 9:15 மணிக்கு கோவிலை திறக்க பட்டாச்சியர் வந்தபோது, பக்தர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 9:30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமியை தரிசித்து சென்றனர்.இதற்கிடையே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த குன்றத்துார் நகராட்சி கவுன்சிலர் ராஜா, அங்கு வந்து, 'பட்டாட்சியர், கோவிலை முறையாக திறப்பதில்லை. அவர் விருப்பத்திற்கு திறந்து கோவில் பணி பார்க்கிறார்' எனக்கூறி சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். குன்றத்துார் போலீசார் வந்து, அவரிடம் சமரசம் பேசினர்.
Next Story