போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு சென்னை மயிலாப்பூர், முத்துராமன் தெருவை சேர்ந்தவர் பிரேம்சந்த். இவரது வீட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த நான்கு நபர்கள் அவருடன் தகராறு செய்துள்ளனர். இது குறித்து அவர் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் அந்த வீட்டிற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தகராறில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது வீசினர். இதில் வெடிகுண்டு வெடித்ததில் சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் உள்ளிட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . விசாரணையில் பிரேம்சந்த் என்பவருக்கும் தரம்சந்த் என்பவருக்கும் இடையே மந்தைவெளி மார்க்கெட்டில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தரம்சந்த் தன்னுடைய ஆதரவாளர்களை பிரேம்சந்த் வீட்டிற்கு அனுப்பி தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது வீசியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் ஜெகன் என்ற ஜெகதீசன், சுந்தர், முருகன் என்ற நொண்டி முருகன், சின்னபூபாலன் என்ற அன்பு, உசேன், தரம்சந்த், அப்பு என்ற கிருஷ்ணசாமி ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது உசேன், அப்பு என்ற கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். மேலும் ஜெகன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதால் அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சுந்தர், சின்னபூபாலன், தரம்சந்த் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் எதிரி முருகன் என்ற நொண்டி முருகன் மீது வழக்கு விசாரணை அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து இன்று வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகனை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Next Story




