சாலை வசதி இல்லாததால் உயிருக்கு போராடும் நபரை டோலி கட்டி தூக்கி வரும் அவல நிலை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் சொக்கநிலை என்ற மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின பளிர் இன மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்துச் சென்ற சுரேஷ் என்பவரின் மகன் ரஜினி (வயது 17) நேற்று அவர்களது தோட்டத்தில் மரத்திலிருந்த மிளகு பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து கால் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆதிவாசி பழங்குடியின மக்கள் அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கண்ணகரை வரை டோலி கட்டி தூக்கி வந்து ஆம்புலன்சில் நேற்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story




