கரூர் -மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கு சென்று மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்.
கரூர் -மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கு சென்று மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுக்கள் அளிப்பதும் வழக்கம். அதேசமயம் மாற்றுத்திறனாளிகளால் நீண்ட நேரம் காத்திருக்க இயலாது என்பதால் அவர்களுக்கு என தனி இருக்கை அமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரடியாகவே மாற்றுத்திறனாளிகளை சந்தித்து மனுக்கள் பெறுவது தற்போது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் முதலில் மாற்று திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்றார். அப்போது அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள குறைகள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி , சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து அந்த பணிகளை உடனே முடிக்க உத்தரவிட்டார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்த போது அவருக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கி மேலும் கை ஊன்றுகோலையும் வழங்கியதோடு மாதம் தோறும் உதவித்தொகை உங்களுக்கு வருகிறதா? எனவும் அக்கறையுடன் அவரிடம் விசாரித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இதனைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர், துறை ரீதியான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story




