அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை

வேளாங்கண்ணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து ஆரோக்கிய அன்னையை வணங்கி செல்கின்றனர். புனித ஸ்தலமான வேளாங்கண்ணியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதாரத்துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் வீ.கிருஷ்ண குமார் அறிவுறுத்தலின் பேரில், கீழையூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சு.மோகன் தலைமையில் சுகாதாரத் துறையினர் வேளாங்கண்ணி ஆர்ச், முச்சந்தி பள்ளி மற்றும் மருத்துவமனை வளாக சுற்றுவட்டார பகுதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் ஆய்வு செய்தனர். கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் உள்ளனவா என சோதனை செய்தனர். குறிப்பாக பள்ளி மற்றும் மருத்துவமனை வளாகங்கள் அருகாமையில் 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி என விளம்பரப் பதாகைகள் வைக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. ஆய்வில். சுகாதார ஆய்வாளர்கள் கோ.அருண் மணிகண்டன், ஜே.குணசீலன் ஆகியோர் ஈடுபட்டனர்.
Next Story