சேலம் அருகே தண்டவாளத்தை கடந்த பஸ் டிரைவர் ரயில் மோதி பலி

X
சேலம்-நாமக்கல் ரெயில் மார்க்கத்தில் மல்லூர்-ராசிபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை-சேலம் ரெயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இறந்தவரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் சங்ககிரி அருகே வடுகப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 45) என்பதும், தனியார் பஸ் டிரைவர் என்பதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் குமாருக்கு விடுமுறை என்பதால் நண்பர்களை பார்க்க அவர் ராசிபுரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு ரெயில் தண்டவாளத்தை அவர் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரெயில் மோதியதில் அடிபட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

