குமரி : காதல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்

X
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வீரமார்த்தண்டன் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவர் நாகர்கோவிலில் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனுஷா ஜாஸ்மின் (33 ), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுரேசுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அனுஷா ஜாஸ்மின் கணவரை விட்டு பிரிந்து 2 குழந்தைகளுடன் தம்மத்துகோணம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து ஒரு வாரத்துக்கு முன் சுரேஷ், மனைவியிடம் சமாதானம் பேசி சேர்ந்து வாழ சம்மதித்துள்ளார். இந்தநிலையில் நேற்று சுரேஷ், மனைவியை போனில் தொடர்புகொள்ள முயன்றார். அப்போது செல்போன் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. உடனே வீட்டுக்கு வந்த சுரேஷ், மனைவியிடம் நீ யாரிடம் பேசினாய்? எனக்கேட்டு தகராறு செய்தார். ஆத்திரமடைந்த சுரேஷ், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அனுஷா ஜாஸ்மினின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அனுஷா ஜாஸ்மின் அலறினார். சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

