கபிலர்மலை வட்டாரத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள்.

கபிலர்மலை வட்டாரத்தில் மானிய விலையில்  விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள்.
X
கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசன உபகரணங்களை மானிய விலையில் பெறலாம் தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்.
பரமத்திவேலூர், செப்.24: கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் நுண்ணீர் பாசன உபகரணங்கள் மானியத்தில் பெற்றிட அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-கபிலர்மலை வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 248 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெருவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நுண்ணீர் பாசனம் அமைக்க மார்பளவு புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு, குறு விவசாயி சான்றிதழ், நில மற்றும் நீர் ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய உதவி தோட்டக்கலை அலுவலர்களான ரா.நவநீதகிருஷ்ணன், ச.கார்த்திக், க.கதிர்வேலு ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
Next Story