திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கை வலியுறுத்தி

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு காத்திருப்பு போராட்டம்
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் முழுவதும்  நேற்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்  சங்கத்தின்  மாவட்டத் துணைத் தலைவர் கி.பிரபாகரன் தலைமையில்  நடைபெற்று வருகிறது. வருவாய்த் துறை அலுவலர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்தினை 25 சதவீதமாக மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வுதியத்தை, பழைய ஓய்வுதிய திட்டமாக மாற்றி அரசு ஊழியர்களுக்கான நலனை பாதுகாக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக, மாநில மையத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ச்சியாக மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும், மக்கள் பணி பாதிக்க கூடாது என்பதற்காக காலையிலிருந்து 3 மணி வரை மக்கள் பணி அரசு பணியை பார்த்து விட்டு 3 மணிக்கு மேல் கோரிக்கைக்காக இந்த போராட்டத்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில், நில அளவைத் துறை வட்ட சார் ஆய்வாளர் ஆர்.கௌரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க திருக்குவளை வட்ட கிளை தலைவர் டி.வரதராஜன், தமிழ்நாடு  வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.முத்துகுமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story