அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக நெல் உலர வைக்கும் பணி தாமதம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலை தீவிரப்படுத்த கோரிக்கை
நாகை மாவட்டத்தில், 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஈசனூர், வாழக்கரை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனம்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் உலர வைக்க கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நனைந்து சேதமடைந்துள்ளன. திருக்குவளை- மேலப்பிடாகை செல்லும் வாழக்கரை பிரதான சாலையில், விவசாயிகள் சாலையில் நெல் உலர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மழை பெய்ததால், அவசரமாக நெல் மணிகளை அள்ள முடியாமல் தார்ப்பாய் கொண்டு மூடினர். இருப்பினும், பெருமளவு நெல்மணிகள் நனைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். லேசாக வெயில் அடிக்கும்போது, அதில் நெல்மணிகளை உலர வைப்பது சிரமமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் அறுவடை நடைபெறுவதால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அதிகளவில் மலை போல் குவிந்து தேக்கமடைந்துள்ளன. இதனால் கொள்முதல் பணி தாமதமாகி வருவதாகவும், விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையின் காரணமாக, நெல் உலர்த்தும் பணி மற்றும் கொள்முதல் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாகை மாவட்ட விவசாயிகள்  கவலை அடைந்துள்ளனர்.
Next Story