சேலம் ரெயில்களில் லேப்டாப் திருடிய 2 பேர் கைது

X
திருப்பூர் பாளையன்காடு பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு கடந்த 6 மாதங்களாக படித்து வருகிறார், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் தன்னுடன் படிக்கும் சேலத்தை சேர்ந்த சக மாணவருடன் சென்னையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா ரெயில் பெட்டியில் அவர்கள் பயணம் செய்தனர். அந்த இளம்பெண் தனது லேப்டாப்பை பேக் ஒன்றில் வைத்திருந்தார். சேலத்திற்கு ரெயில் வந்தபோது பேக்கில் இருந்த லேப்டாப்பை காணவில்லை. இதையடுத்து அவர் அதே ரெயில் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் லேப்டாப்பை திருடி இருக்கலாம் என சந்தேகப்பட்டு சேலம் ரெயில்வே போலீசாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். இதையடுத்து ரெயில்வே போலீஸ் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர், விசாரணையில் அவர் சென்னை பல்லாவரம் வளசலூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அழகு சுந்தரம் (வயது 23) என்பது தெரிய வந்தது, இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் தெலுங்கானா மாநிலம் மியோபூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் ஷர்மா. இவருடைய மகன் சந்தோஷ சாய்குமார் (35), இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 20ந் தேதி தாம்பரத்தில் இருந்து சேலத்துக்கு ரெயிலில் வந்தார். அதிகாலையில் இவர் தனது லேப்டாப் பேக்கை படுக்கையில் வைத்து விட்டு கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இருக்கையில் வைத்திருந்த லேப்டாப் பேக் மற்றும் அதில் வைத்திருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சேலம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பேக்கில் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி மர்ம நபர் ஏ.டி.எம். சென்டர்களில் பயன்படுத்தியதை வைத்து போலீசார் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சேலம் ரெயில் நிலையத்தின் முன்பு சந்தேகப்படும்படி நின்று இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், லேப்டாப் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை திருடியது காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் கோபால் (29) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story

