சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற ஜனவரி- 2 ஆம் தேதி உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற ஜனவரி- 2 ஆம் தேதி உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு
X
விமுக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில்,சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவீந்திரன் உள்ளிட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்கா வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் 882 ஏக்கர் பரப்பளவில், தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.அப்பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர், கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவீந்திரன் உள்ளிட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர்,சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... சிப்காட் திட்டம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட 98 சதவீதம் பேர், ஏற்கனவே, நில நிர்வாக ஆணையருக்கு, இரண்டு முறை ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளனர்.இருந்தும், நில நிர்வாக ஆணையர் அனுப்பியதாக, வி.ஏ.ஓ.,, சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் நோட்டீஸ் கொடுத்து கையெழுத்து வாங்கி வருகிறார். சில நோட்டீஸ்கள், வளையப்பட்டி தபால் அலுவலகத்தில் இருந்து பதிவு தபாலில் அனுப்புகிறார்.இது, இப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த அச்சத்தையும், குழப்பதையும் ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தில் சீலும், கையெழுத்தும் இல்லை. தமிழக முதல்வர் இது குறித்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும்.மேலும், தொடக்கத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தை தாண்டி யாரோ செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் உள்ளது. அதனால்,
தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல், வளையப்பட்டி அருகில் உள்ள கஸ்தூரிரங்கன் மலை அருகில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இது சம்மந்தமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் அளித்துள்ளோம் என அவர் கூறினார்.
Next Story